தாறுமாறாக ஏறிய தக்காளி விலை... அப்ப இனி தொக்கு வைக்க மாட்டாங்களா!?

Aadmika
Jun 27, 2023,02:11 PM IST
சென்னை : சென்னை, மும்பை, டில்லி, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் தக்காளியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தாமதமாக துவங்கிய பருவமழை. அதிகப்பட்டியான வெப்பம், உற்பத்தி சரிவு என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

மும்பையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்கப்படுகிறது. இது மே மாதத்தில் இருந்ததை விட கிலோவிற்கு ரூ.50 அதிகரித்துள்ளது. டில்லியில் ஒரு கிலோ ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தான் இப்படி தாறுமாறாக விலை ஏறி உள்ளதாக டில்லிவாசிகள் தெரிவித்துள்ளனர். அதிகமாக மழை பெய்தது தான் விலை ஏற்றத்திற்கு காரணம் என டில்லி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



டில்லியில் மே மாதத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவிர்த்து வரும் மக்கள் தக்காளி மட்டுமின்றி பெரும்பாலான காய்கறிகளின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர். 

வட இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான உணவு வகையில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுவது தக்காளி தான். அதன் விலை இப்படி அதிரடியாக உயர்ந்துள்ளதால் என்ன செய்வதென தெரியாமல் மக்கள் தவிர்த்து வருகின்றனர். பலர் சோஷியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதே சமயம் தென் மாநிலங்களில் தக்காளிக்கு மாற்றாக என்ன உள்ளது என கூகுள் செய்து தேடி வருகின்றனர்.

சென்னையிலும் தக்காளி விலை கிலோ ரூ. 100 ஐத் தாண்டி ஓடிக் கொண்டிருப்பதால் மக்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர். அரை கிலோ தக்காளியை பலரும் வாங்க ஆரம்பித்து விட்டன். மேலும் தக்காளி சட்னி, தக்காளி தொக்கு போன்றவற்றை தற்காலிகமாக தள்ளிப் போடவும் ஆரம்பித்துள்ளனர்.

தக்காளி விலை விண்ணைத் தொட ஆரம்பித்து விட்டதால் இல்லத்தரசிகள், சமையல் செய்யும் இல்லத்தரசர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். இப்படி விலை ஏறிட்டே போனா என்னத்த சமைக்கிறது என்று கடுப்பாகியுள்ளனர்.

வழக்கமாக வெங்காய விலைதான் இப்படி நாடு முழுவதும் திடீரென உயர்ந்து கண்ணீர் விட வைக்கும். ஆனால் இப்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.