தக்காளி விலை திகு திகு உயர்வு.. கிலோ ரூ. 140க்கு எகிறியது.. இப்படியே போனா எப்படி?!!
சென்னை: சென்னையில் தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ. 140 வரை விற்கிறது. விலை சற்றும் குறையாமல் உயர்ந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சமீப காலமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் கவலை அடைந்தனர். ரூ. 100ஐத் தாண்டி விலை எகிறியதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது அதையும் தாண்டிப் போய் விட்டது தக்காளி விலை.
தக்காளியைப் பார்த்து விட்டு ஏக்கத்தோடு வேறு காய்கள் பக்கம் திரும்பும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். தக்காளி விலை இன்னிக்கு என்னப்பா என்று கடையில் கேட்டால் தங்கத்தின் விலையா என்று கடைக்காரர்களே கிண்டலாக கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
இடையில் சில நாட்கள் விலை சரிவு காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ. 130 ஆக உள்ளது. சில்லறை விற்பனையில் ரூ. 140 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கால் கிலோ, அரை கிலோவுடன் நின்று கொள்ளும் நிலைக்குப் போய் விட்டனர்.
தக்காளி விலை இன்னும் சில நாட்களுக்கு பெரிய அளவில் சரியாது என்று கடைக்காரர்களே கூறுகின்றனர். இதனால் எப்படி சமையல் செய்வது என்ற கவலையில் உள்ளனர் குடும்பத் தலைவிகள்.
சாம்பார் வெங்காயம்
இதேபோல இன்னொரு அதிர வைக்கும் விலையுடன் காணப்படுவது சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம். இதுவும் கிலோ ரூ. 130 முதல் 140 வரை விற்கப்படுகிறது. இதனால் சாம்பார் வெங்காயத்தையும் மக்கள் பார்த்துப் பார்த்து வாங்கும் நிலையில் உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பார்கள். அந்த நாள் பார்த்து தக்காளி விலை அதிகரித்துக் காணப்பட்டதால் மக்கள் அயர்ந்து போயுள்ளனர்.