சனிப்பெயர்ச்சி முடிஞ்சுடுச்சா? இல்லையா?...குழப்பத்திற்கு முடிவு கட்டிய கோவில் நிர்வாகம்

Aadmika
Jan 21, 2023,10:39 AM IST
காரைக்கால் : ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமல்ல, நம்பிக்கை கிடையாது என்று சொல்லும் பலரும் அதிகம் எதிர்பார்ப்பது சனிப்பெயர்ச்சியையும், குரு பெயர்ச்சியையும் தான். அதுவும் சனி பகவானுக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சனியின் பிடியில் சிக்கி, படாத பாடுபட்ட ராசிக்காரர்களுக்கு எப்போது சனிப்பெயர்ச்சி வரும், இந்த முறை பெயர்ச்சியால் தங்களின் ராசிக்கு என்ன பலன் என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள்.



அப்படி 2023 ம் ஆண்டில் நடக்க போகும் சனிப்பெயர்ச்சியை அதிகமானவர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17 ம் தேதியும், வாக்கிய பஞ்சாஞ்கப்படி மார்ச் 29 ம் தேதியும் நடக்கும் என சொல்லி இருந்தார்கள். ஆனால் சிலர் வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் மாதம் 23 ம் தேதி தான் சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது என்றும் சொன்னார்கள். இந்த முரண்பாடான தகவல்களால் சனிப்பெயர்ச்சி எப்போது? அது முடிந்து விட்டதா, இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ளவும், சனி பரிகார பூஜைகள் செய்யவும் சனி பகவானுக்கு உரிய பரிகார தலமாக விளங்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். ஆனால் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்ததால் மக்கள் குழப்பமடைந்தனர்.

பொதுவாக சனிப்பெயர்ச்சி நடக்கும் போது திருநள்ளாறு கோவிலில் நளன் தீர்த்தத்தில் நீராடி, சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றுவார்கள். சனிப்பெயர்ச்சி நடப்பதற்கு 48 நாட்களுக்கு முன்பாகவும், சனிப்பெயர்ச்சி முடிந்த பிறகு 48 நாட்களும் திருநள்ளாறு கோவில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும். ஆனால் இம்முறை அப்படி இல்லை. 

இதனால் பக்தர்கள் குழப்பத்தை தீர்க்கும் வகையில் திருநள்ளாறு கோவில் நிர்வாகம், சனிப்பெயர்ச்சி பற்றி விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. அப்போது சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். 

திருநள்ளாறு ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி நடக்கும் தேதி மற்றும் நேரம் ஆகியன பிறக்கு இருக்கும் சோமகிருது வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கத்தில் வெளியிடப்படும். சோமகிருது ஆண்டிற்கான வாக்கிய பஞ்சாங்கம் தைப்பூச தினமான பிப்ரவரி 5 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அது வெளியானதும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.