நினைத்ததை நிறைவேற்றும் தை கிருத்திகை விரதம்

Aadmika
Jan 30, 2023,11:04 AM IST
முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்று கிருத்திகை விரதம். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகனுக்கு உண்டான திருநாமங்களில் முதல் திருநாமம் கார்த்திகேயன் என்பதாகும். கந்தனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பு செய்யும் வகையில் கார்த்திகை விரதம்  முருகனுக்குரிய விரதமாக போற்றப்படும் என்றும், இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்றும் சிவபெருமானே அருளியது தான் இந்த கார்த்திகை விரதம்.



வருடத்தில் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை, ஆடி கிருத்திகை ஆகியன மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. 2023 ம் ஆண்டு தை கிருத்திகையானது ஜனவரி மாதம் 30 ம் தேதி வருகிறது. கிருத்திகை நட்சத்திர நாளில் முருகனுக்கு செய்யப்படும் அர்ச்சனைகளில் மிக விசேஷமானது சண்முக அர்ச்சனையாகும். இது 6 வகை நைவேத்தியங்கள் படைத்து, 6 வகை மலர்களால், 6 வகை மந்திரங்கள் சொல்லி, 6 அர்ச்சகர்களால் செய்யப்படும். 

தொடர்ந்து கார்த்திகை விரதம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஆடி மாத கார்த்திகையில் துவங்கி, தை மாத கார்த்திகையில் நிறைவு செய்யலாம்.  கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து, முருகனை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய் தோஷம், செவ்வாய் மற்றும் வியாழன் திசை சரியில்லாததால் ஏற்பட்ட திருமண தடை விலகும். வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக தீராத நோய் தீரும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பரணி நட்சத்திரத்திலேயே விரதத்தை துவங்கி விட வேண்டும். கிருத்திகையன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் முருகனுக்கு விளக்கேற்றி, நம்மால் முடிந்த ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைத்து, கிடைக்கும் மலர்களை கொண்டு பூஜை செய்யலாம். முருகனுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, திருப்புகழ் இவற்றில் ஏதாவது ஒன்றை பாராயணம் செய்யலாம்.