என்னாது சரக்கு விலை உயருதா?.. காசு பத்தாதே.. கவலையில் குடிமகன்கள்!

Aadmika
Jul 20, 2023,11:56 AM IST
சென்னை : தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.  

திடீர் மது விலை உயர்வால் குடிமக்களிடையே பெரும் சோகம் நிலவுகிறது. ஆனாலும் குடிக்காமல் இருக்க முடியாதே.. எனவே இதற்கான மாற்று வழிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் வாங்கப்படும் பீர் வகைகள், வோட்கா, ஒயின், ஜின் ஆகியவற்றின் விலை ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.



தமிழ்நாடு மதுபான விற்பனை கழகம் (டாஸ்மாக்) மதுபானங்களின் எம்ஆர்பி., விலையில் மாற்றம் செய்து நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீர் வகைகள் 330 மில்லி டின்கள் ரூ.10 ம், 500 மில்லி டின்கள் ரூ.20 ம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் வோட்கா, விஸ்கி, ஜின், ரம் வகைகளின் 750 மில்லி லிட்டர் டின்களின் விலை ரூ.240 ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பாட்டில்களின் விலை ரூ.320 வரை உயர்ந்துள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணம், சரக்கு இறக்குமதி செய்யப்படும் ஏஜன்ட்களுக்கான சிறப்பு கட்டணமாக வழங்கப்பட உள்ளது. இதற்காகவே இந்த விலை உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் கழகம் வெளியிட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் மதுபான வகைகளின் பட்டியலில் 500 க்கும் அதிகமான மதுபான வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த இறக்குமதி செய்யப்பட்ட குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்படும் மதுபான வகைகள் மட்டுமல்ல 18 வகையான லோக்கல் சரக்குகளின் விலையையும் டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. இவைகள் ரூ.320 வரை விலை உயர்ந்துள்ளது. ஸ்காட் விஸ்கி ரூ.460 க்கும், ஒயின் ரூ.520 க்கும் விற்கப்படுகிறது. ஏறக்குறைய ரூ.140 முதல் ரூ.170 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ஏற்கனவே பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை எக்ஸ்ட்ரா எடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அப்படிச் செய்தால் இனி சஸ்பென்ட் என்று அரசு எச்சரித்துள்ளது. இருந்தாலும் கூடுதல் கட்டணத்தை சமாளித்து எப்படி குடித்து கரையேறுவது என்ற கவலையில் குடிமகன்கள் உள்ளனர்.

குடிமக்களே.. இதுதான் கரெக்டான சமயம்... குடிப்பழக்கத்தை  மெல்ல மெல்ல நிறுத்த முயற்சி பண்ணுங்க.. உங்களை நம்பி உள்ளவங்க நல்லா இருப்பாங்க.. உங்களையும் நல்லா பாத்துப்பாங்க!