செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றத்தை ஏற்க ஆளுநர் என். ஆர். ரவி மறுப்பு!

Su.tha Arivalagan
Jun 16, 2023,10:02 AM IST
சென்னை:  அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்களை மாற்றும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர். என். ரவி மறுத்து விட்டார். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவிக்கு சிக்கல் வந்துள்ளது.

நிதி மோசடி புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகள், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கப் பிரிவினர் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஆனால் நெஞ்சு வலிப்பதாக கூறி அவர் கதறித் துடித்ததால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.

ஆனால் இந்த பரிந்துரைகளை ஏற்க ஆளுநர் ஆர். என். ரவி மறுத்து ���ிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வருக்கு ஆளுநர் ஆர். என். ரவி கடிதம் அனுப்பியிருந்தார் என்பது நினைவிருக்லகாம்.

இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், முதல்வரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார். முதல்வர் அனுப்பிய கடிதம் சரியில்லை என்றும் திசை திருப்பும் விதமாக உள்ளது என்றும் ஆளுநர் முதலில் கூறியிருந்தார். இதையடுத்து மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் இலாகா மாற்றம் முதல்வரின் உரிமை என்று சுட்டிக் காட்டப்பட்டது.

ஒரு அமைச்சரின் இலாகாவை மாற்றுவதற்கு முதல்வருக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசியல் சாசனத்தின்படி ஒரு  அமைச்சரின் இலாகாவை மாற்றுவதற்கும், அமைச்சரவை மாற்றுவதற்கும் முதல்வருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு அல்ல.

ஆளுநர் அரசியல் சாசனத்தை மதிக்க வேண்டும். முதல்வரின் பரிந்துரையை அவர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய பாஜக அரசின் ஏஜென்டாக மட்டுமே அவர் செயல்பட விரும்புகிறார். ஒரு அமைச்சர் வழக்கை எதிர்கொள்கிறார் என்பதற்காக மட்டும் அவரை நீக்கி விட தேவையில்லை. 

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூடத்தான் குஜராத் மாநில அமைச்சராக இருந்தபோது வழக்கை எதிர்கொண்டார். அவரை நீக்கினார்களா? பல அதிமுக அமைச்சர்கள் கூடத்தான் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டனர். அவர்கள் நீக்கப்பட்டார்களா என்று கேட்டுள்ளார் பொன்முடி.

ஏற்கனவே ஆளுநர் - முதல்வர் இடையே பல்வேறு மோதல்கள் உள்ளன. இந்த நிலையில் செந்தில் பாலாஜி இலாகாக்களை மாற்ற ஆளுநர் மறுத்திருப்பதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. செந்தில் பாலாஜியால் தனது அமைச்சர் பணிகளைக் கவனிக்க முடியாது. அதேசமயத்தில் அவரிடம் பொறுப்புகளையும் கொடுத்து வைத்திருக்கவும் முடியாது. அதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. ஆளுநர் தற்போது இலாகா மாற்றத்துக்கு அனுமதி தராததால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஒற்றை வாய்ப்புதான் முதல்வர் முன் உள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.