பாஜக எஸ்.ஜி. சூர்யா திடீர் கைது.. மதுரை போலீஸ் அதிரடி.. அண்ணாமலை கண்டனம்!

Su.tha Arivalagan
Jun 17, 2023,09:16 AM IST
மதுரை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து சமூக வலைதளத்தில் போட்ட பதிவு தொடர்பாக தமிழ்நாடு பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை போலீஸார் சென்னையில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு சென்னை வந்த மதுரை தனிப்படை போலீஸார், சூர்யாவை அவரது தி.நகர் இல்லத்தில் வைத்துக் கைது செய்து மதுரைக்குக் கூட்டிச் சென்றனர். இந்த கைதுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.



எஸ்.ஜி.சூர்யாவை 4 பிரிவுகளின் கீழ் மதுரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கவுன்சிலர்  விஸ்வநாதன் என்பவர்,  தூய்மைப் பணியாளர் ஒருவரை கட்டாயப்படுத்தி  கழிவு நீரில் இறங்கி சுத்தம் செய்யச் சொன்னதால் அந்த  பணியாளர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாகவும், இந்த விவகாரம் குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கள்ள மெளனம் சாதிப்பதாகவும் கூறியிருந்தார் எஸ்.ஜி. சூர்யா.

இதுதொடர்பாக வெங்கடேசனுக்கும் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதில் புரச்சீ போராளி என்று விளித்து வெங்கடேசனை கடுமையாக சாடியிருந்தார். உங்களது போலி அரசியல், மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது.. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே என்றும் அதில் கூறியிருந்தார் சூர்யா.

இந்த விவகாரம் குறித்து மதுரை போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரிலேயே சூர்யா கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.



அண்ணாமலை கண்டனம்

எஸ்.ஜி. சூர்யா கைதுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொட்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக பாஜக மாநிலச் செயலாளர்  எஸ்.ஜி.சூர்யா, நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள். 

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. 

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு.

பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.