பரந்தூர் விமான நிலையம்.. 200 நாட்களாக போராடும் விவசாயிகள்.. டிடிவி.தினகரன் கோரிக்கை
Feb 11, 2023,12:43 PM IST
சென்னை : பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுடன் பேச்சு நடத்துமாறு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 200 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக இந்த விவகாரத்திற்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டிடிவி. தினகரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமானநிலையம் அமைப்பதற்காக 13 கிராமங்களை சேர்ந்த 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் 200 ஆவது நாளாக ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடத்துபவர்களின் அழைப்பின் பேரில் அவர்களை சந்திக்க சென்ற பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழ.வெற்றிச்செல்வன் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஜனநாயக வழியில் போராடம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது சட்டவிரோதமான செயல் அல்ல. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், போராட்டம் நடத்தும் மக்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.