வெளுக்கும் வெயில்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Aadmika
Jun 05, 2023,12:25 PM IST
சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 05 ம் தேதி திறக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கல் குறையவில்லை. பல ஊர்களில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை சதம் அடித்தது. பல இடங்களில் மழை பெய்த போதிலும் வெப்பம் குறையவில்லை. 


தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 5 ம் தேதிக்கு  பதிலாக ஜூன் 07 ம் தேதி திறக்கப்படும் என கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை ஒரு புறமும், மறுபுறம் மாணவர்களும் பள்ளிக்கு திரும்ப தயாராகி வந்தனர்.

இந்நிலையில் வெயிலின் தாக்கல் குறையாமல் இருந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஜூன் 7 ம் தேதிக்கு பதிலாக ஜூன் 12 ம் தேதி பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு உத்தரவை மீறி முன்கூட்டியே பள்ளிகளை திறக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.