தமிழக அமைச்சரவை மாற்றம்.. டிஆர்பி ராஜா அமைச்சரானார்.. பிடிஆர் இலாகா மாற்றம்

Aadmika
May 11, 2023,11:29 AM IST
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல, நிதியமைச்சராக இருந்து வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டு அவரது இலாகா தங்கம் தென்னரசுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் செய்த ஊழல்கள் பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியிட்ட ஆடியோ ஆகியவற்றால் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என சொல்லப்பட்டு வந்தது. அதோடு சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கி விட்டு, புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தர திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டது.



இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா  பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி புதிய அமைச்சருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதி, மனிதவள மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த எம்.பி.சாமிநாதனின் இலாகா மாற்றப்பட்டு அது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அளிக்கப்ட்டுள்ளது. மு.பெ.சாமிநாதன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்படுவார். சா.மு.நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை மனோ தங்கராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலாகா மாற்ற விவரம்:

1. டிஆர்பி ராஜா - தொழில்துறை
2. தங்கம் தென்னரசு - நிதித்துறை
3. எம்.பி.சாமிநாதன் - தமிழ் வளர்ச்சித்துறை
4. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்ப துறை
5. மனோ தங்கராஜ் - பால்வளத்துறை