அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறார் ஆளுநர்.. சட்டசபையில் தனி தீர்மானம்!

Aadmika
Apr 10, 2023,12:04 PM IST

சென்னை : ஆளுநர் குறித்து விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை விதிகளை தளர்த்தி தனி தீர்மானம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.  மேலும் ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சார்பாக செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி விட்டார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளுநர் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க கூடாது என்ற சட்டசபை விதியை தளர்த்துவதற்கான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பாஜக.,வும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உறுப்பினர்களின் கடும் அமளி, எதிர்ப்பு நிலவிய நிலையில் சட்டசபை கதவுகள் மூடப்பட்டன. 



அதன் பின்னர் ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டசபையில் விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை சட்டசபையில் கொண்டு வந்தார். தனி தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் தனி தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதிமுக உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து, அவையில் இருந்து வெளியேறி உள்ளனர். சட்டசபை கதவுகளை மூடி தனி தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆளுநருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். ஆளுநருக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  2 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

ஆளுநருக்கு எதிரான தனி தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் ஆளுநர் செயல்படுகிறார். பற்றற்ற அடையாளம் உள்ளவராக ஆளுநர் இருக்க வேண்டும் . ஆனால் அவர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறார். ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி விட்டார். தினந்தோறும் ஒரு கூட்டம், தினந்தோறும் ஒரு கருத்து என்று செயல்படுகிறார்.

நான் டெல்லிக்குச் செல்லும் சமயங்களிலும், பிரதமர் சென்னைக்கு வரும் சமயங்களிலும் திட்டமிட்டு தமிழக அரசுக்கு எதிராக பேசுகிறார். தமிழக மக்களின் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறார். சட்டசபை நிறைவேற்றும் சட்டங்களை ஏற்க மறுக்கிறார். அரசியல் சாசனத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார்.

தமிழக அரசுக்கு நண்பராக இருக்க ஆளுநர் ரவி தயாராக இல்லை. பதவியேற்றது முதலே தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எதிராகவே நடந்து கொள்கிறார்.  ஆளுநருக்கு அரசியல்சட்டம் தெரியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அவரது அரசியல் விசுவாசம், அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கி விட்டது. அதனால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி அமைச்சரவை முடிவுகளையும், சட்டசபை தீர்மானங்களையும் பொது வெளியில் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக அவர் மாறிப் பேசுகிறார்  என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி தீர்மானத்தை வாசித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை :