சிங்கப்பூரில் மு. க.ஸ்டாலின்.. 9 நாட்களில் 2 நாடுகளில் சுற்றுப்பயணம்!

Aadmika
May 23, 2023,04:40 PM IST
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடுகளில் ஒன்பது நாள் பயணமாக இன்று சிங்கப்பூர் சென்றடைந்தார்.  அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோரும் சென்றனர்.

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் உள்ள 200 க்கும் அதிகமான நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வரின் இந்த பயணம் அமைய உள்ளது. சென்னையில் இருந்து முற்பகல் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு அமைச்சர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.  சிங்கப்பூரில் 2 நாட்கள் முதல்வர் தங்கியிருப்பார்.



சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 25 ம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார். அங்கு 7 நாட்கள் தங்கி இருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மீண்டும் மே 31 ம் தேதி பிற்பகலில் சென்னை திரும்ப உள்ளார். 

கடந்த ஆண்டு துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்டாலிவ் தமிழகத்தில் தொழில் துவங்க, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக பல ஆயிரம் கோடி அளவிற்கு தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் செல்லும் ஸ்டாலின், அந்நாட்டில் உள்ள முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளார். 

கடந்த ஆண்டு ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தின் போது அப்போது தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு சென்றிருந்தார். சமீபத்தில் புதிய தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிஆர்பி ராஜா செல்கிறார். பதவியேற்ற சில நாட்களிலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பேசி எவ்வாறு முதலீடுகளை ஈர்க்க போகிறார் என்பதை அனைவரும் கவனித்து வருகின்றனர்.