சிபிஐ தேடி வரும் என்று பயந்து விட்டார் ஸ்டாலின்.. அண்ணாமலே நேரடி அட்டாக்!

Su.tha Arivalagan
Jun 15, 2023,10:03 AM IST
சென்னை: ரூ. 200 கோடி மெட்ரோ ஊழல் புகாரில் சிபிஐ தன்னை விசாரிக்க வரலாம் என்ற அச்சத்தால்தான் தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு வழங்கியிருந்த விசேஷ அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்துள்ளார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுக பைல்ஸ் என்ற பெயரில் சில தகவல்களை வெளியிட்டிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஒப்பந்தம் தொடர்பாக சில புகார்களை சுமத்தியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2006 - 2011 இடையிலான திமுக ஆட்சியின்போது,  சென்னை மெட்ரோ ரயில் முதல் பாதி திட்டப் பணிகளின்போது சில பணிகளைச் செய்வதற்காக அல்ஸ்டாம் நிறுவனத்திடமிருந்து திமுகவுக்கு ரூ. 200 கோடி லஞ்சம் கைமாறியதாக அவர் கூறியிருந்தார். 



இந்தப் புகாரை  உடனடியாக திமுகவும் மறுத்திருந்தது. அதேபோல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், பாஜக அண்ணாமலை கூறியது போல எந்த ஊழலும் நடக்கவில்லை என்று விளக்கியிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு வழங்கியிருந்த ஒப்புதல் அனுமதியை நேற்று அதிரடியாக திமுக அரசு நீக்கி உத்தரவிட்டது. இதனால் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல், இங்கு சிபிஐ விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாநில அரசுகள் இதுபோல ஒப்புதல் அனுமதியை ரத்து செய்துள்ளன. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடும் இணைந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 200 கோடி லஞ்சம் வாங்கியதாக தமிழ்நாடு பாஜக சார்பில் குற்றம் சாட்டியிருந்தோம். அதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தும், தன்னைத் தேடி வாசலுக்கு வந்து நிற்கும் என்ற அச்சத்தில்தான் இப்படிப்பட்ட அசாதாரண முடிவை அவர்கள் எடுத்திருக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

தலைமைச் செயலக ரெய்டு

அதேபோல இன்னொரு டிவீட்டில் தலைமைச் செயலக ரெய்டு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முன்பு தெரிவித்த கருத்துக்கும், தற்போது தெரிவித்துள்ள கருத்துக்கும் முரண்பாடுகள் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார் அண்ணாமலை.

இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில், உங்க வசதிக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிரீர்களே முதல்வரே..  உங்களது இரட்டை நிலைப்பாட்டை அம்பலமாக்க நீங்கள் பேசியதை நாங்கள் தொடர்து நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா?

சார், நீங்கள் ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ முதல்வர் அல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதல்வர்.  மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.