எந்த சவாலையும் சந்திக்க திமுக ரெடி...ரெய்டுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர்

Aadmika
Jul 17, 2023,12:41 PM IST
சென்னை : ரெய்டை பார்த்த பயப்பட மாட்டோம். எந்த சவாலையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெத்தியடியாக பதிலளித்துள்ளார்.

பெங்களூருவில் பாஜக.,விற்கு எதிராக தேசிய அளவில் ஒன்று சேர நினைக்கும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தயாராகி வந்தார். இந்த நிலையில் காலையிலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. 



செந்தில் பாலாஜியை தொடர்ந்து தமிழத்தில் இரண்டாவது அமைச்சருக்கும் அமலாக்கத்துறை 'செக்' வைத்துள்ளது.  இந்த பரபரப்புக்கு இடையிலும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டார். பெங்களூரு புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்வரை சுற்றி வளைத்த பத்திரிக்கையாளர்கள், செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி வீட்டிலும் அமாலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருவது பற்றி கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அமலாக்கத்துறை சோதனை பற்றி திமுக.,வுக்கு கவலை இல்லை. எந்த சாவாலையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது. தன் மீதான வழக்குகளை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார். இதெற்கெல்லாம் வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். சமீபத்தில் பொன்முடிக்கு எதிரான இரண்டு வழக்குகளை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்கான தந்திரம் தான் இந்த ரெய்டு. ஏற்கனவே திமுக.,வுக்கு எதிராக கவர்னர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் எங்களுக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கி உள்ளது. இது எங்களின் தேர்தல் வேலைகளை சுலபமாக்கி உள்ளது. இது வழக்கமாக பாஜக போடும் நாடகங்களில் ஒன்று தான். இதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட போவதில்லை என்றார்.