உணவு டெலிவரி ஆப் துவங்கிய சுனில் ஷெட்டி.. இவருக்கு இப்படி ஒரு முகமா?

Aadmika
May 12, 2023,03:47 PM IST

மும்பை : பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி உணவு டெலிவரி ஆப் தொடங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


சமீப ஆண்டுகளாக நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் ஆப்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த தொழிலில் போட்டி அதிகரித்து விட்டதால் வாடிக்கையளர்களை கவருவதற்காக டிஸ்கவுன்ட், ஆஃபர், விலைகுறைப்பு என போட்டி போட்டுக் கொண்டு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றன உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள்.




தற்போது இந்த உணவு டெலிவரி தொழிலில் நடிகரும், தொழிலதிபருமான சுனில் ஷெட்டியும் களமிறங்கி உள்ளார். இதற்காக புதிய ஆப் ஒன்றை மே 10 ம் தேதியன்று மும்பையில் அறிமுகம் செய்தார். இதற்கு வாயு (Waayu) என பெயர் வைத்துள்ளனர். அனிருத் கேட்கிரே, மண்டர் லண்டே ஆகியோர் இதன் நிறுவனர்களாக இருந்தாலும் இதற்கு முதலீடு செய்தவர் சுனில் ஷெட்டி தான். இவர் தான் இதற்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார்.


மும்பையில் உள்ள இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் கழகத்தின் பின்னணியில் வாயு ஆப் செயல்பட உள்ளது. மற்ற உணவு டெலிவரி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வாயு ஆப்பில் கொஞ்சம் விலை அதிகம் தான். இருந்தாலும் டெலிவரி சார்ஜ் எதுவும் வசூலிப்பது கிடையாது என்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த ஆப்பை பயன்படுத்துவதற்கு மாதம் ரூ.1000 செலுத்த வேண்டுமாம். பிறகு இது ரூ.2000 ஆகவும் உயர்த்தப்படுமாம்.


தற்போது மும்பையில் மட்டும் செயல்படும் இந்த ஆப், விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாம். சுனில் ஷெட்டி ஏற்கனவே சுகாதாரம் மற்றும் விளையாட்டு துறை தொடர்பான பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தியும், பார்ட்னராகவும் இருந்து வருகிறார். அது மட்டுமல்ல நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவிற்கும் திரும்புவதற்கு இவரிடம் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஹேரா பேரி 3 படத்தின் மூலம் சினிமாவிற்கு கம் பேக் கொடுக்க உள்ளார் சுனில் ஷெட்டி.