சென்னையில் திடீரென அடித்து ஊற்றிய மழை.. மக்கள் குஷி.. 2 நாளைக்கு பெய்யுமாம்!

Aadmika
Mar 17, 2023,12:48 PM IST

சென்னை : சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே திடீரென மழை கொட்டி தீர்த்து வருவதால் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வெப்பமும் சற்று தணிந்துள்ளது.


சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், இப்போதே இப்படி என்றால் கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோமோ என சென்னைவாசிகள் புலம்பி வந்தனர். கோடை துவங்குவதற்கு முன் கோடை கால உணவுகள் போன்றவற்றிற்கு மக்கள் மாறி வந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச் 17) அதிகாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.


கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, சென்னை விமான நிலையம், தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 10.4 மி.மீ., என்ற அளவில் மழை பதிவானது. இந்நிலையில் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் 23 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.




மழை தீவிரமடைந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும் 100 அடி சாலை பகுதியை மக்கள் தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மெதுவாகவே நகர்ந்து வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 


கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென கொட்டும் மழையால் சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இதனால் மக்கள் செம குஷியாகி உள்ளனர்.


இந்த மழை 2 நாட்களுக்குப் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.