கோவிந்தா...ஸ்ரீரங்கா : பக்தர்களின் பக்தி வெள்ளத்துடன் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

Aadmika
Jan 02, 2023,01:39 PM IST

ஸ்ரீரங்கம் : வைணவ திருத்தலங்களில் முதன்மையாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும்.


திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் இன்று( ஜனவரி 02) அதிகாலை திறக்கப்பட்டது. 




ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22 ம் தேதி துவங்கியது. ஸ்ரீரங்கத்தில் 20 நாள் விழாவாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். டிசம்பர் 22 ம் தேதி துவங்கி பகல் உற்சவம் நடைபெற்று வந்தது. 


பகல் பத்து உற்சவத்தில் நாள்தோறும் அரங்கர் சேவை நடைபெற்றது. இதில் நாள்தோறும் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை உற்சவர் நம்மாழ்வார் விண்ணப்பம் (கேட்டல்) செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று (ஜனவரி 01) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை 03.45 மணிக்கு நம்பெருமாள், ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டை உள்ளிட்ட ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டார். வேத விண்ணப்பம் முடிந்த பிறகு 04.45 மணிக்கு  நம்பெருமாள் சொர்க்க வாசல் கடந்து வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


நம்பெருமாளை தொடர்ந்து பக்தர்களும் கோவிந்தா...ஸ்ரீரங்கா கோஷ முழக்கத்துடன் சொர்க்க வாசல் வழியாக சென்று, பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று முதல் இரா பத்து உற்சவம் துவங்க உள்ளது. ஜனவரி 11 ம் தேதி வரை  இரா பத்து உற்சவம் நடைபெற உள்ளது. ஜனவரி 10 ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், ஜனவரி 11 ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்வும் நடைபெற உள்ளது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.  


ஸ்ரீரங்கத்தை போன்று மற்ற வைணவ தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.





Image credit: Srirangam Ranganathaswamy Temple