பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் கூடாரவல்லி பற்றிய தெரியுமா ?

Aadmika
Jan 11, 2023,10:25 AM IST
மார்கழி மாதத்தின் சிறப்புக்களில் ஒன்றாக குறிப்பிடப்படுவது ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள். தினம் ஒரு பாசுரம் வீதம் மார்கழியின் 30 நாட்களும் 30 பாசுரங்கள் பாடப்படுகிறது. திருப்பாவை பாடல்களை பாடி, பெருமாளை நினைத்து மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, பெருமாளின் பெருமாளைகளை பாடி வழிபடுவதற்கு பாவை நோன்பு என்று பெயர். பெருமாளின் அருளை பெறுவதற்காக இந்த நோன்பு இருக்கப்படுகிறது.



திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள், ஆண்கள், திருமணமான பெண்கள் அனைவரும் இந்த விரதத்தை இருக்கலாம். பாவை நோன்பு இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். பாவை நோன்பு எப்படி இருக்க வேண்டும், கண்ணனை எப்படி வழிபட வேண்டும், அவனின் அருளை பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என ஆண்டாள் தனது பாசுரங்களில் பட்டியலிட்டு விளக்கி இருப்பார்கள்.

பாவை நோன்பினை நிறைவு செய்ய போகிறதை ஆண்டாள் தனது 27 வது பாசுரத்தில் குறிப்பிட்டிருப்பார். இந்த நாளில் தான் ஆண்டாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளின் திருவடிகளை அடைந்ததாக சொல்லப்படுகிறது. பாவை நோன்பிருந்து ஆண்டாள், பெருமாளின் அருளை பெற்று மோட்சம் அடைந்த நாளையே கூடாரவல்லியாக கொண்டாடுகிறோம். பெருமாள் கோவில்கள் அனைத்திலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் பெருமாளுக்கு அக்காரஅடிசல் நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள்.

கூடாரவல்லி நாளில் பெருமாளையும், ஆண்டாளையும் வழிபட்டால் அவர்களின் அருள் கிடைத்து, வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேருவார்கள். செல்வ வளம் பெருகும்.