சித்தராமையா ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு.. நாளை மதியம் பதவியேற்பு விழா!

Su.tha Arivalagan
May 19, 2023,09:22 AM IST
பெங்களூரு: கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சித்தராமையாவை ஆட்சியமைக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

கர்நாடக மாநில சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த முதல்வராக சித்தராமையாவை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு கர்நாடக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் முறைப்படி சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இதையடுத்து சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சென்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினர். அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் கெலாட், ஆட்சியமைக்குமாறு சித்தராமையாவைக் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 12.30 மணியளவில் பெங்களூரு கன்டீரவா உள்ளரங்க மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். அதில் முதல்வராக சித்தராமையா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார். இதே விழாவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பொறுப்பேற்பார். 

இவர்களுடன் சிறிய அளவிலான அமைச்சரவையும் பதவியேற்றுக்  கொள்ளும் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.