தேசியவாத காங்கிரசில் மீண்டும் ட்விஸ்ட்.. சரத் பவார் - அஜித் பவார் ரகசிய சந்திப்பு ஏன்?

Aadmika
Aug 13, 2023,11:13 AM IST
மும்பை: சரத் பவார் - அஜித் பவாரின் ரகசிய சந்திப்பு தொடர்பான தகவல் வெளியானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

சரத் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரசில் ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. இதனால் சரத் பவாரின் உறவினரான அஜித் பவார், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து தனது ஆதரவு எம்எல்ஏ.,க்களுடன் பிரிந்து வெளியே வந்தார். 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் தேசிய வாத காங்கிரசிற்கு 53 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். 



தனியாக பிரிந்து வந்த அஜித் பவாருக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனால் அஜித் பவார் பாஜக.,வில் இணைய போவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்தார். அதோடு கடந்த மாதம் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் அஜித் பவார் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் புனேவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட லோகமான்யா திலக் தேசிய விருது வழங்கும் விழாவில் சரத் பவார், அஜித் பவார் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் ஒருவருடன் ஒருவர் பேசுவதை தவிர்த்தனர். இதனால் அஜித் பவார் தனிக்கட்சி துவங்குவார் என்று கூட பேசப்பட்டது. தேசிய வாத காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு தேசிய அளவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் சரத் பவாரும், அஜித் பவாரும் ரகசியமாக சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எதற்காக இந்த சந்திப்பு நடந்தது, இவர்கள் என்ன பேசிக் கொண்டனர் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. ஆனால் இவர்களின் ரகசிய சந்திப்பு கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் மீண்டும் ஒன்று சேர போகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.