கட்சியை உடைத்த தம்பியுடன்.. ஒரே மேடையேறும் சரத் பவார்.. யாரோட விழாவில்னு பாருங்க!

Su.tha Arivalagan
Jul 11, 2023,12:52 PM IST
புனே: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆகஸ்ட் 1ம் தேதி புனே நகரில் நடைபெறும் விழாவில் லோகமான்ய திலக் தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார். அந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அந்தக் கட்சியை உடைத்து வெளியேறி துணை முதல்வராகியுள்ள அவரது தம்பி அஜீத் பவாரும் கலந்து கொள்ளவுள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த விழாவில் இரு பவார்களிடமும் பிரதமர் மோடி சமாதானமாக போகுமாறு பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது. 



பிரதமர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வருமாறு இரு பவார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக அஜீத் பவார் நிச்சயம் பங்கேற்பார். ஆனால் சரத் பவார் வருவாரா என்று தெரியவில்லை.

இதுகுறித்து விழாவை நடத்தும் திலக் சம்ரக் மந்திர் டிரஸ்ட் அறக்கட்டளையின் தலைவர் தீபக் திலக் கூறுகையில், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சரத் பவாரை அழைத்துள்ளோம். அஜீத் பவார் உள்ளிட்டோர் அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பயஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார் அஜீத் பவார். நேராக பாஜக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு துணை முதல்வரானார். அவரது ஆதரவாளர்களான 8 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இந்த அரசில் இணைந்துள்ளனர். நாங்களே தேசியவாத காங்கிரஸ் கட்சி, அதே பெயரில், அதே சின்னத்தில்தான் நாங்கள் எதிர் வரும் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றும் அஜீத் பவார் கூறினார். மேலும் சரத் பவாருக்கு வயதாகி விட்டதாகவும் அவர் கூறியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இப்படியெல்லாம் அஜீத் பவார் பேசி வைத்துள்ள நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் சரத் பவார் விழாவில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.