அதி தீவிர புயலாக மாறியது பிபர்ஜாய்.. குஜராத் கரையை ஜூன் 15ல் கடக்கும்

Su.tha Arivalagan
Jun 11, 2023,10:55 AM IST
டெல்லி:  மிகவும் அதி தீவிர புயலாக மாறியுள்ள பிபர்ஜாய், ஜூன் 15ம் தேதி வாக்கில் குஜராத் கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அதி தீவிரமான புயலாக மாறி மேலும் வலுவடைந்த நிலையில் பிபர்ஜாய் புயலானது, அரபிக் கடலில் கிழக்கு - மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருகிறது.  அடுத்த ஆறு மணி நேரத்தில் இது மேலும் அதி தீவிரமாக வலுவடைந்து நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலானது குஜராத் மாநிலத்தில் ஜூன் 15ம் தேதி வாக்கில், அதி தீவிரப் புயலாக செளராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோரப் பகுதிகளையொட்டி கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து இது நகர்ந்து பாகிஸ்தான் பக்கம் போகக் கூடும்.




தற்போது இந்தப் புயல் மும்பையிலிருந்து  600 கிலோமீட்டர் தொலைவிலும் போர்ப்ந்தர் நகரிலிருந்து 530 கிலோமீட்டர் தொலைவிலும், கராச்சியிலிருந்து 830 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதற்கிடையே புயலை எதிர்கொள்ள குஜராத் மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அனைத்து விதமான தயார் நிலைகளையும் அது முடுக்கி விட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தான் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கராச்சி துறைமுகத்தில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கப்பல்களை பாதுகாப்பாக நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கராச்சி துறைமுகத்தில் தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.