செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு .. மீண்டும் இன்று ஹைகோர்ட்டில் விசாரணை

Su.tha Arivalagan
Jun 27, 2023,10:54 AM IST
சென்னை:  அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு மீது இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவரது இருப்பிடங்களில், முதலில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையைத் தொடர்ந்து  அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுதார் செந்தில் பாலாஜி. இதையடுத்து அவரை அரசினர் ஓமந்தூராரர் மருத்துவமனைக்கு கொண்டு போய்ச் சேர்த்தனர்.



இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக நீதிபதிகள்  நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரித்து வருகிறது. இன்று மீண்டும் விசாரணை தொடங்கி நடந்ததது.

கைது செய்யப்பட்ட பின்னர் ஒருவரால் ஆட்கொணர்வு மனு மூலம் நிவாரணம் பெற முடியாது என்று அமலாக்கத்துறை சார்பில் வீடியோ காணொளி மூலம் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார். அதேசமயம், இந்த கைது நடவடிக்கையே முதலில் சட்ட விரோதமானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் எதையும் அமலாக்கத்துறை கடைப்பிடிக்கவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டுள்ளது.

தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டுள்ளன. செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் ஆஜராகியுள்ளார்.