அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்... புழல் சிறைக்கு மாற்றம்!

Aadmika
Jul 17, 2023,05:05 PM IST
சென்னை : சென்னை காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை முடிந்து, சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தூசு தட்டி எடுத்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியையும் கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.



ஆனால் விசாரைணக்கு அழைத்துச் செல்லும் வழியில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருதய அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவருக்கு ஆப்பரேஷன் நடத்தப்பட்டது. அவர் சிகிச்சையில் இருப்பதால் கைது, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று சிகிச்சை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படவுள்ளதாகவும்,அங்குதொடர் சிகிச்சையில் அவர் வைக்கப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு சென்றுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் ஏற்கனவே இன்று காலை துவங்கி அதிரடி சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.