ராத்திரியிலிருந்து சொய்ய்ய்னு.. மழை.. தமிழ்நாடு நனைந்தது.. பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

Su.tha Arivalagan
Jun 19, 2023,08:49 AM IST

சென்னை: சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது. இதையடுத்து பல மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடைகாலம் மிக கொடூரமாக மாறிப் போயிருந்தது. ஆரம்பத்தில் வெயில் சரியாக இல்லாத போதும் கூட பின்னாட்களில் வெயில் வெளுத்தெடுத்து விட்டது. குறிப்பாக ஜூன் மாதத்தில் வெயில் மிகக் கடுமையாக இருந்தது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் 40 டிகிரிக்கு மேல்தான் வெயில் பதிவானது. சென்னையில் 43 டிகிரி வரை வெயில் பதிவானதால் மக்கள் மண்டை காய்ந்து போய்க் கிடந்தனர்.




இந்த நிலையில் நேற்றிலிருந்து மழை தொடங்கியுள்ளது. நேற்று விட்டு விட்டு பகலில் பெய்த மழை இரவிலிருந்து அடை மழையானது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் அண்டை மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்தது.


சென்னையிலும் புறநகர்களிலும் தொடர்ந்து மழை பெய்து நகரின் பல பகுதிகளை வெள்ளக்காடாக்கி விட்டது. பல தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி விட்டனர்.


சென்னையில் கடந்த 27 வருடங்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரே நாளில் சென்னையில் 14 செமீ மழை பெய்துள்ளது.  சென்னை மட்டுமல்லாமல் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.


இந்த மழை மேலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


முதலில் வெயிலுக்கு.. இப்போது மழையால் லீவு


வழக்கமாக ஜூன் மாதத்தில் மழைக்காக சென்னையில் விடுமுறை விடப்படுவது மிக மிக அரிதாகும். கடந்த 1996ம் ஆண்டுதான் அதுபோல விடப்பட்டுள்ளது. அதன் பிறகு இப்போதுதான் மழைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் திறப்பதாக இருந்த பள்ளிக்கூடங்கள் கடும் வெயில் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டு 12ம் தேதி திறநதது. ஆனால் தற்போது மாதத்தின் மத்தியில் கன மழைக்காக விடுமுறை விடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.