தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.. 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு!

Su.tha Arivalagan
Jun 12, 2023,09:11 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

முன்னதாக ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 5ம் தேதி 1 முதல் 5ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கடும் வெயில் நிலவி வந்ததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.



அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் பல்வேறு நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் வெளுத்துக் கொண்டிருந்தது. சென்னையில் வரலாறு காணாத வகையில் 108 டிகிரிக்கெல்லாம் வெயில் வெளுத்து வாங்கியது. இதையடுத்து பள்ளிகள் திறப்பை மறு பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு திறப்பை 12ம் தேதிக்கும், 14ம் தேதிக்கும் ஒத்திவைத்தது.

தொடர்ந்து வெயில் சற்றும் குறையாமல் அடித்துக் கொண்டிருப்பதால், இதுவும் கூட தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்படுள்ளன. வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளதால் மாணவர்கள் நேற்றே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆயத்தமாகும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே எல்லாமே தயார் நிலையில் இருப்பதால் அதில் சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.