துன்பங்களையும், பாவங்களையும் போக்கும் சனிப்பிரதோஷம்.. 10 தகவல்கள்!

Aadmika
Jul 15, 2023,10:56 AM IST
சென்னை : தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. இது தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். ஆலகால விஷத்திடம் இருந்து தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை தானே விழுங்கி, விஷத்தை கண்டத்தில் நிறுத்தி, நீலகண்டனாக காட்சி தந்தார்.

ஆலகால விஷம் சிவனின் உடலுக்குள் சென்றாள் உலக உயிர்கள் அழிந்து விடும் என பயந்த பார்வதி தேவியும், தேவர்களும் சிவனை வேண்டினார்கள். அவர்களின் பக்திக்கு மகிழ்ந்து சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி, தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அருள் செய்த காலமே பிரதோஷ காலமாகும். தினந்தோறும் மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். தினமும் வரும் பிரதோஷ காலத்திற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர்.



பிரதோஷங்களில் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும், சனிக்கிழமையில் வரும் சனி மகா பிரதோஷமும் மிகவும் விசேஷமாகும். சிறப்பு மிகுந்த சனிப் பிரதோஷம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. சிவனுக்குரிய அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானது பிரதோஷ விரதமாகும்.

2. சனிப் பிரதோஷத்தன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருளுடன், சனி பகவானின் அருளும் கிடைக்கும். சனியால் ஏற்படும் அனைத்து தீமைகளும் விலகும்.

3. ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள், துன்பங்களை போக்கக் கூடியது சனிப் பிரதோஷ வழிபாடு.

4. ஒரு சனிப் பிரதோஷத்தன்று சிவன் கோவிலுக்கு சென்றால், 5 வருடங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

5. சாதாரண பிரதோஷங்களை விட ஆயிரம் மடங்கு பலன்களை தரக் கூடியது சனி பிரதோஷ வழிபாடு.

6. பிரதோஷ வேளையில் ஓம் நம சிவாய மந்திரத்தை உச்சரித்தால் அதன் பலன் பலமடங்காக கிடைக்கும்.

7. பிரதோஷத்தன்று நந்தியையும், சிவனையும் வழிபடுபவர்களுக்கு சனி உள்ளிட்ட நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் எதுவும் பாதிக்காது.

8. சிவ பெருமானை வில்வம் கொண்டும், நந்தியை அருகம்புல் கொண்டும் பிரதோஷ வேளையில் வழிபட வேண்டும்.

9. சிவனுக்கு பிரியமான பால், நெய், தயிர், சந்தனம், திருநீறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

10. பிரதோஷ வேளையில் ருத்ர ஜபம், மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஆகிய சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிப்பதால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.