சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. ரஷ்யாவில் தரையிறக்கம்!

Su.tha Arivalagan
Jun 07, 2023,09:44 AM IST
மாஸ்கோ:  அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்று கொண்டிருந்த இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், ரஷ்யாவின் மகதான் நகருக்குத் திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து இந்த விமானம் சான் பிரான்சிஸ்கோவுக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தது.  இந்த விமானத்தில் 16 ஊழியர்கள் மற்றும் 216 பயணிகள் இருந்தனர். விமானம் ரஷ்யாவின் மகதான் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமான என்ஜின் ஒன்றில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து மகதான் நகர விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்து விமானம் அந்த விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.  விமானம் எந்தப் பிரச்சினையும்  இல்லாமல் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது விமானத்தில் விரிவான சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.