பட்டாசு விபத்துகள் அதிகரிப்பு.. என்ன செய்கிறது திமுக அரசு.. எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

Su.tha Arivalagan
Jun 02, 2023,10:55 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நடந்த பட்டாசு  ஆலை விபத்தில் அந்த ஆலையின் உரிமையாளர் உள்பட 4 பேர் பரிதாபமாக தீயில் கருகி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.



இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அங்கு பணி செய்த 8 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல் அறிந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்றது. ஆகவே இந்த அரசு பட்டாசு தொழிற்சாலைகள், குடோன்கள் ,அரசு நிர்ணயித்த விதிகளை உரிய முறையில் அந்த பட்டாசு தொழிற்சாலைகள்  பின்பற்றுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக  கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதுடன், உடல் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சையும் அவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கிட வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.