ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு ப்ரொமோஷன் நிறுத்தி வைப்பு

Aadmika
May 13, 2023,09:16 AM IST

டில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்து, அவரது எம்பி பதவி பறிபோக காரணமாக இருந்த சூரத் மாஜிஸ்திரேட் ஹரிஷ் குஷ்முக்பாய் வர்மா உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.

குஜராத் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் உள்ளிட்ட 68 நீதித்துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வில் குறைவாக மார்க் எடுத்தவர்களுக்கு பதவி உயர்வும், அதிக மார்க் எடுத்தவர்களுக்கு பதவி உயர்வும் மறுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் இருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.



இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குஜராத் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டின் விதிகளை மீறி செயல்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு சட்ட விரோதமானது எனக் கூறி நீதித்துறையை சேர்ந்த 68 பேரின் பதவி உயர்வை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடந்துள்ளதாக குஜராத் ஐகோர்ட் தாக்கல் செய்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.

இருந்தாலும் மெரிட் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும் படி சுப்ரீம் கோர்ட்டை, குஜராத் ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

மோடி என்ற பெயரை அவதூறாகப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்தவர்தான் இந்த சூரத் மாஜிஸ்திரேட் ஹரிஷ் குஷ்முக்பாய் வர்மா. இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். இதனால் ராகுல் காந்தியின் எம். பி பதவி பறிபோனது என்பது நினைவிருக்கலாம். இந்த தீர்ப்பின் பரபரப்பு கூட இன்னும் மாறாத நிலையில் இவருக்கு பதவி உயர்வு வந்ததால் சலசலப்பும் சர்ச்சையும் எழுந்தது.