தோனி காலைத் தொட்டு வணங்கிய உத்கர்ஷா.. ஹேப்பியாக தாலி கட்டிய ருத்துராஜ் கெய்க்வாட்!

Su.tha Arivalagan
Jun 04, 2023,10:27 AM IST

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டும், மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனை உத்கர்ஷா பவாரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது சென்னை கேப்டன் தோனியை சந்தித்த உத்கர்ஷா, அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றது நினைவிருக்கலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் கெய்க்வாட். இந்திய அணியிலும் இடம் பெற்று ஆடுபவர். இவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த உத்கர்ஷா பவாரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். பவாரும் கிரிக்கெட் வீராங்கனைதான்.


இந்த நிலையில் தற்போது இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடும் இந்திய அணியில் ருத்துராஜும் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் தனது திருமணத்திற்காக அவர் அணியிலிருந்து விலகிக் கொண்டார்.




கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் சிஎஸ்கே வீரர்களான சிவம் துபே, பிரஷாந்த் சோலங்கி மற்றும் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், உம்ரான் மாலிக்  உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 


முன்னதாக சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டி முடிவில் தோனிக்கு தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்து வைத்தார் ருத்துராஜ். அப்போது தோனியின் காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார் உத்கர்ஷா. பின்னர் உத்கர்ஷாவுடனும், ருத்துராஜுடனும் நீண்ட நேரம் பேசினார் தோனி. இருவருக்கும் நிறைய அட்வைஸும், சந்தோஷமான வாழ்க்கைக்கான டிப்ஸ்களையும் அப்போது அவர் கொடுத்ததாக தெரிகிறது.



ருத்துராஜ் கெய்க்வாட், கடந்த 2019ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஆடி வருகிறார்.சமீபத்தில் முடிவடைந்த இந்த ஆண்டு சீசனில் சிறப்பாக ஆடிய ருத்துராஜ் 590 ரன்களக் குவித்திருந்தார். இதில் நான்கு அரை சதங்களும் ஒரு அருமையான 92 ரன்களும் அடக்கமாகும்.


இந்தியாவுக்காக ஒரு ஒரு நாள் போட்டியில் ஆடி 19 ரன்களையும், 9 டி20 போட்டிகளில் ஆடி ஒரு அரை சதத்துடன் 135 ரன்களையும் எடுத்துள்ளார் ருத்துராஜ்.