ரஷ்யாவின் ஆயுத கிளர்ச்சி...புடினுக்கு எதிராக போரை அறிவித்த வாக்னர் ஆயுதக்குழு

Aadmika
Jun 24, 2023,02:01 PM IST
மாஸ்கோ :   உக்ரைன் போரை எதிர்கொள்ள ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப்படை மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவின் தலைமையகத்தை கவிழ்க்க படையெடுக்க உள்ளதாக வாக்ஜர் படை தலைவர் எவ்னெஜி பிரிகோஜின் அறிவித்துள்ளார்.

அதோடு ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் பலவற்றை வாக்னர் படை கைப்பற்றி உள்ளது. இதனால் ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போரை வாக்னர் படைகள் அறிவித்துள்ளன. இதனால் கடுப்பான புடின், வாக்னர் படையினரை கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.



நாட்டு மக்களுக்கு புடின் ஆற்றிய உரையிலும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேச துரோகிகள். ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்தி விட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டு போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக எப்போதும் ஓங்கி இருக்க வேண்டும் என புடின் கேட்டுக் கொண்டுள்ளார்.