இமாச்சல், உத்தரகாண்டிற்கு ரெட் அலர்ட்.. 4 நாட்களுக்கு மழை வெளுக்க போகுதாம்

Aadmika
Jul 12, 2023,01:03 PM IST
டெல்லி : இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்பதால் இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

வடஇந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியன ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தரைப் பாலங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. 




கனமழையால் இமாச்சல பிரதேசம் தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் 5 பேரும், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தின் குளு பகுதியில் மட்டும் இதுவரை 40 கடைகள், 30 வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த மழைக்கு இதுவரை ரூ.3000 முதல் 4000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 4 மாநில்களில் மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரகாண்டின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வரை மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.