யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்?...ரஜினிகாந்த் விளக்கம்

Aadmika
Aug 22, 2023,10:26 AM IST
சென்னை : கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வந்த விவகாரத்திற்கு நடிகர் ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.யோகி ஆதியநாத் காலில் தான் விழுந்தது ஏன் என்பதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் படம் ரிலீசானதும் வழக்கம் போல் இமயமலை புறப்பட்டு சென்றார். எப்போதும் இமயமலை மட்டும் சென்று வரும் ரஜினி, இந்த முறை அப்படியே உத்திர பிரதேசத்திற்கு சென்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அவரை ஜெயிலர் படம் பார்ப்பதற்கு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து அயோத்தி அனுமன் கோவில், புதிதாக கட்டப்பட்டு வரும் ராம்ஜென்ம பூமி ராமர் கோவில் ஆகியவற்றிற்கும் சென்று தரிசனம் செய்தார் ரஜினி. 



ரஜினியின் இந்த திடீர் உ.பி., விசிட் எதற்காக என்நதை தாண்டி, யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போது அவரது காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்ற விவகாரம் தான் ஹாட் டாக்காக கடந்த ஒரு வாரமாக போய் கொண்டிருக்கிறது. சிலர் ரஜினி, பாஜக.,வில் சேர போகிறார். அதற்காக தான் இந்த சந்திப்பு என்றெல்லாம் கிளப்பி விட்டனர். இருந்தாலும் ரஜினி எதற்காக உ.பி., சென்றார்? எதற்காக யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார்? என்ற கேள்வி மட்டும் பெரும் சர்ச்சையாக இருந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் தனது உ.பி., மற்றும் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினி நேற்று இரவு சென்னை திரும்பினார். அவரது வருகைக்காக ஏர்போர்டில் காத்திருந்த பத்திரிக்கையாளர் கூட்டம், அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகளை அடுக்கியது. அப்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை தான் அதிகமானவர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ரஜினி, சன்னியாசிகள், யோகிகளை சந்திக்கும் போது அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அவர்கள் என்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் விழுந்து வணங்குவது என்னுடைய வழக்கம். அப்படி தான் யோகி ஆதித்யநாத் காலிலும் விழுந்தேன். இதை சர்ச்சையாக்கி, கேலி செய்வது அவர்களை அவமதிப்பதற்கு சமம் என்றார்.

ஜெயிலர் படத்தை பிரம்மாண்ட வெற்றி பெறும் அளவிற்கு செலுக்கிய நெல்சன் திலீப்குமார், சிறப்பாக இசையமைத்த அனிருத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த ரஜினியிடம், 2024 லோக்சபா தேர்தல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தான் அரசியல் பேச விரும்பவில்லை என கூறி விட்டு, தனது ஸ்டையிலில் வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார் ரஜினி.