மறுபடியும் குடையை கையில் எடுங்க .. டமால் டுமீல் மழை வருது.. வானிலை தகவல்!

Su.tha Arivalagan
Jul 08, 2023,10:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பரவலாக மிதமான மழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வெதர்மேனும் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்குப் பருவ மழை வெளுத்துக் கட்டி வந்தது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகியது.  வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கபிணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு நல்ல மழை கிடைத்தது.

கேரளாவில் மழை கொட்டித் தீர்த்ததால் குற்றாலம் அருவிகளுக்கும் நல்ல மழை கிடைத்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களுக்கும் நல்ல மழை கிடைத்தது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலமாக மிதமான மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், கேரளாவில் பெய்து வரும் பெரும் மழை இன்றுடன் சற்று ஓயும் என்று தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்வீட்டில், கேரளாவில் பெய்து வரும் கன மழைக்கு இன்றே கடைசி நாள். வயநாடு, கபிணி அணைப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. வடக்கு கேரளாவில் உள்ள கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,பிற வடக்கு மாவட்டங்கள், உட்புற மாவட்டங்களில் நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் நாளை முதல் மழை குறையும். அதேசமயம், தமிழ்நாட்டில் டமால் டுமீல் மழை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.