மழை தொடரும்.. ஜூன் 15ம் தேதி மாநிலம் முழுவதும் நனைய வாய்ப்பு!

Su.tha Arivalagan
Jun 12, 2023,09:15 AM IST
சென்னை: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஜூன் 15ம் தேதி லேசான மற்றும் மிதமான மழையும், சில சமயங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் முடிவடையும் தருவாயில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் வெயில் வரலாறு காணாத அளவில் இருந்து வருகிறது. 108 டிகிரி வரை வெயில் பதிவாகி மக்களை கிறுகிறுக்க வைத்து விட்டது. இந்த நிலையில் தற்போது மழைக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.



நேற்று மாலைக்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பதிவானது. குறிப்பாக தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் இரவில்  விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.  தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டு விட்டு மழை பெய்ததால் வெட்கை பெரிய அளவில் தணிந்தது. இந்த மழையானது ஜூன் 15ம் தேதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையத் தகவல்கள் கூறுகையில், மேற்கிலிருந்து வரும் காற்றின் போக்கு காரணமாக ஜூன் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் லேசானத முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காதாம். 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.