மே 21.. ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து

Aadmika
May 20, 2023,03:15 PM IST

சென்னை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மே 21 ம் தேதி சென்னை வர உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது தற்போது ரத்தாகியுள்ளது. தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல் காந்தி வருவதாக இருந்தார்.

முன்னதாக இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை தொடர்ந்து தனது தந்தையின் நினைவிடத்திற்கு வர உள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியை வரவேற்பதற்காக பெரும் திரளான கட்சி தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். 



ஆனால் தற்போது ராகுல் காந்தியின் பயணம் ரத்தாகியுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி, 1991 ம் ஆண்டு மே 21 ம் தேதி இரவு ஸ்ரீபெரும்பத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இதில் அவருடன் சேர்த்து 13 பேர் உயிரிழந்ததுடன் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல் காந்தி ஸ்ரீபெரும்பத்தூர் வருவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் பல முறை ராகுல் காந்தி இங்கு வந்திருந்தாலும், ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று ஸ்ரீபெரும்பத்தூர் வந்தது கிடையாது. இதற்கு முன் பாரத் ஜேதா யாத்திரையின் போது செப்டம்பர் 07 ம் தேதி ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூர் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.

தற்போது கர்நாடகத்தில் மிகப் பெரிய வெற்றியை காங்கிரஸ் ஈட்டியுள்ளது. இதற்கு ராகுல் காந்தியும் கூட முக்கியக் காரணம் ஆவார். அவரது பாரத் ஜோதா யாத்திரை கர்நாடகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவே மோடி அலையை ஓரம் கட்டி கர்நாடக மக்களை காங்கிரஸ் பக்கம் இழுத்து வந்ததாக பலரும் சொல்கிறார்கள். இந்த வெற்றியானது அனைத்து மாநிலங்களுக்கும் பரவும் என்றும் காங்கிரஸார் நம்பிக்கையுடன் உள்ளனர்.