ராகுல் காந்தியின் வீட்டிற்கே சென்று போலீஸ் விசாரணை... கொந்தளித்த தொண்டர்கள்!

Aadmika
Mar 19, 2023,03:45 PM IST
புதுடில்லி : பாரத் ஜோதா யாத்திரையின் போது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் இன்று ராகுல் காந்தியின் வீட்டிற்கே சென்று விசாரைண நடத்தினர்.

சமீபத்தில் கன்னியாக்குமரி துவங்கி ஸ்ரீநகர் வரை பாரத் ஜோதா யாத்திரை என்ற நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். இந்த பயத்தின் நிறைவு நாளாக ஜனவரி 30 ம் தேதி ஸ்ரீநகரில் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "தற்போதும் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் பலாத்காரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  பாரத் ஜோதா யாத்திரையின் போது பல பெண்கள் என்னிடம் வந்து தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், தொடர்ந்து பல பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருவதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என்றும் என்னிடம் கேட்டனர் என பேசினார்.



ராகுல் காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் யார் என்ற விபரத்தை தாருங்கள். அது தொடர்பாக விசாரணை நடத்தி, அவர்களுக்கு உரிய நீதியை பெற்று வருகிறோம் என கேட்டு டில்லி போலீசார் சார்பில் சமீபத்தில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ராகுல் காந்தி தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

இதனால் டில்லி சட்ட ஒழுங்கு துறை சிறப்பு கமிஷனர் தலைமையிலான போலீசார் ராகுல் காந்தியின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் பல மணி நேரம் காத்திருந்தும் ராகுல் காந்தியை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதற்கிடையில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக டில்லி போலீசார் அவரது வீட்டிற்கே சென்றதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இது இந்திரா காந்தி காலத்தில் அவரது வீடு புகுந்து கைது செய்து சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தெரியாமல், அவரது உத்தரவு இல்லாமல் இது நடத்திருக்காது என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராகுல் காந்தியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதற்காக டில்லி போலீசாருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் டில்லியின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.