இம்ரான் கான் ஆதரவாளர்களால் பற்றி எரியும் பாகிஸ்தான்.. சமூக வலைதளங்கள் முடக்கம்

Aadmika
May 10, 2023,09:13 AM IST
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கோர்ட் வளாகத்தில் இருந்து துணை ராணுவப் படையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்து, இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் பாகிஸ்தானில் பல இடங்களில் கலவரம், போராட்டங்கள் வெடித்துள்ளது.

ஊழல், நில மோசடி போன்ற விவகாரங்கள் தொடர்பாக இம்ரான் கான் மீது 100 க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் விசாரைணக்கு ஆஜராகவில்லை. இம்ரான் கானை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என அந்நாட்டு ராணுவம் பல வழிகளில், பலமுறை முயற்சித்தது. இருந்தும் அவற்றிலிருந்து இம்ரான் கான் தப்பி வந்தார். 



இந்நிலையில் நேற்று லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் கோர்ட்டிற்கு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தார் இம்ரான் கான். அப்போது அவரை சுற்றி வளைத்த ஏராளமான துணை ராணுவ படையினர், சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு வலுக்கட்டாயமாக கைது செய்து, இழுத்துச் சென்றனர். இம்ரான் கான் கைது செய்யப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வைரலானது. துணை ராணுவத்தின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்திற்குள் நுழைந்த இம்ரான் கானின் ஆதரவாளர்கள், அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இந்த போராட்டங்கள் கலவரங்களாக மாறி உள்ளது. கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலவரக்காரர்களை போலீசார் விரட்டி அடித்து வருகின்றனர். இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்று வருவதால் நாடு பற்றி எரிந்து வருகிறது.

நாடு முழுவதும் பரவி வரும் கலவரம் காரணமாக பாகிஸ்தானின் ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் திணறி வருகின்றன.