"ரூ.500 க்கு சிலிண்டர், பெண்களுக்கு ரூ.1500".. ம.பியை அதிர வைத்த பிரியங்கா காந்தி!

Aadmika
Jun 13, 2023,09:20 AM IST
ஜபல்பூர் : கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியால் செம குஷியாகி விட்ட பிரியங்கா காந்தி, மத்திய பிரதேச தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என முனைப்புடன் களமிறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 

மத்திய பிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே பிரச்சாரத்தை துவக்கி விட்டார் பிரியங்கா. மத்திய பிரதேச மக்களை கவருவதற்காக 5 முக்கியமான வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார். 



ஜபல்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பெண்ணிற்கு மாதம் ரூ.1500 சம்பளம் வழங்கப்படும். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் ரூ.500 க்கும் வழங்கப்படும். 100 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம். 200 யூனிட் வரையிலான மின்சாரம் பாதி கட்டணத்தில் வழங்கப்படும்.

விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

நர்மதை நதிக்கரையில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். பாஜக இதே போன்ற வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் நிறைவேற்றவில்லை. டபுள் இன்ஜின், டிரிபிள் இன்ஜின் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இதே போல் பேசியதால் தான் அவர்களை மக்கள் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்து விட்டனர்.

ஆனால் சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை பார்த்தீர்கள் என்றாலே உங்களுக்கு உண்மை விளங்கும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

கடந்த முறை மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. ஆனால் குதிரை பேரத்தில் ஈடுபட்டு பாஜக ஆட்சியை கைப்பற்றி விட்டது. பணத்தை வைத்து பாஜக அனைவரையும் விலைக்கு வாங்கி விட்டது என்றும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.