"பூலோக சொர்க்கத்தின் திறப்பு விழா".. புதிய நாடாளுமன்றம் ரெடி.. 28ம் தேதி திறக்கிறார் மோடி

Su.tha Arivalagan
May 19, 2023,09:46 AM IST
டெல்லி: மிகப் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி மே 28ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.

சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவை அடங்கிய பிரமாண்ட கட்டட வளாகம் டெல்லியில் கட்டப்பட்டு வருகிறது. இதில்  புதிய நாடாளுமன்றக் கட்டடம் மிகப் பிரமாண்டமாக, ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல சூப்பராக கட்டப்பட்டுள்ளது.



லோக்சபா வளாகத்தில் 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் விஸ்தாரமாக லோக்சபா உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல ராஜ்யசபாவில், 300 பேர் வரை அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் என்றால் 1280 உறுப்பினர்கள் வரை அமர முடியும். 

இந்தப் புதிய நாடாளுமன்ற வளாகத்தை மே 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இதற்கா  அழைப்பை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமருக்கு விடுத்துள்ளார். புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு  விழா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம்  தேதி நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பணிகள் விரைவாக நடந்து வந்தன. சமீபத்தில் கூட பிரதமர் கட்டுமானப் பணிகளை நேரில் பார்த்தார். அங்கு வேலை செய்வோரிடமும் அவர் கலந்துரையாடினார். 

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் மிக மிக பழமையானது. 1927ம் ஆண்டு கட்டப்பட்ட, 96 வயது  கட்டடமாகும். இங்கு தீவிரவாதிகள் புகுந்த சம்பவம் மறக்க முடியாத முக்கிய நிகழ்வாகும். அப்போது பிரதமராக வாஜ்பாய் இருந்தார் என்பது நினைவிருக்கலாம். காலத்திற்கேற்ற வகையில் இந்த கட்டடத்தை விஸ்தரிக்க வழி இல்லாததால், புதிய நாடாளுமன்றத்தைக் கட்ட பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் பணிகள் அறிவிக்கப்பட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளன.