ஆபீசை விற்கும் பிரபல டெக் கம்பெனி.. ஏன் அப்படி என்ன கஷ்டம் ?

Aadmika
Jun 28, 2023,12:08 PM IST

பெங்களுரு : பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் பெங்களுருவில் உள்ள 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலகத்தை விற்க முடிவு செய்துள்ளது. ரூ.450 கோடி அளவுக்கு இந்த அலுவலகம் விற்பனையாகும் என்று கருதப்படுகிறது.

விற்பனை மற்றும் குத்தகை என்ற அடிப்படையில் 3 ஆண்டு கால ஒப்பந்தத்தில் இதை மேற்கொள்ளவும் இன்டெல் திட்டமிட்டுள்ளது. அதன்படி இடத்தை விற்ற பின்னர் அந்த இடத்திலேயே குத்தகையில் இந்த நிறுவனம் தொடர்ந்து சில காலம் செயல்படும். இன்டெல் நிறுவனத்தின் அலுவலகத்தை வாங்க செம போட்டா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் பெங்களுருவின் முன்னணி பில்டர்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். 



பொருளாதார மந்தநிலை காரணமாக உலகின் பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடு வருவதால் பல நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு தங்களின் சொத்துக்களை விற்று, வேறு சில துறைகளில் முதலீடுகள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. செலவுகளை குறைக்கும் நோக்கத்திற்காக இன்டெல் அலுவலகத்தை விற்க முடிவு செய்துள்ளது. 

சிக்கன நடவடிக்கையாக அலுவலக இடத்தை சுருக்கிக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல கர்நாடகாவின் பல முக்கிய நகரங்களில் ஒப்பந்தம், வாடகை என்ற அடிப்படையில் அலுவலகத்தை நடத்தவும் இன்டெல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்டெல் நிறுவனம் சிப் தயாரிப்பில் முன்னோடி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.