"கதவைத் திற காத்து வரட்டும்".. விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்த பயணி.. ஷாக்!

Su.tha Arivalagan
May 26, 2023,04:24 PM IST
சியோல்: தென் கொரியாவில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது ஒரு பயணி தெரியாமல் கதவைத் திறந்து விட்டதால் 9 பயணிக்கு பலத்த காற்று முகத்தில் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. தென் கொரியாவின் சியோல் நகருக்கு 200 பயணிகளுடன் ஏசியானா ஏர்லைன்ஸைச் சேர்ந்த ஏர்பஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. டேகு சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்த அந்த விமானம் ரன்வேயை நெருங்கிய நிலையில் திடீரென விமானத்தின் அவசர கால கதவு ஒன்றை ஒரு பயணி திறந்து விட்டார். 



இதனால் பலத்த காற்று விமானத்துக்குள் வீசத் தொடங்கியது. விமானம் ரன் வேயை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது கதவு திறக்கப்பட்டதால் காற்று பலமாக வீசியதில் ஜன்னலோரம் இருந்த பயணிகள் திக்குமுக்காடிப் போனார்கள். காற்று முகத்தில் வேகமாக பட்டதால் அவர்களால் மூச்சு விட முடியவில்லை.

ரன்வேயிலிருந்து 650 அடி உயரத்தில் அப்போது விமானம் பறந்து கொண்டிருந்தது.  இருப்பினும் நல்ல வேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விமானம் பின்னர் தரையிறங்கியதும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட 9 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விமானத்தின் அவசர கால கதவைத் திறந்து விட்ட பயணியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொட்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் பறக்கும்போது அவசர கால கதவைத் திறந்தால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.  நடு வானில் இதுபோலநடந்திருந்தால் மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கும்.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு விமானம் கிளம்பவிருந்த நிலையில் அரசியல்வாதி ஒருவர் அவசர கால கதவைத் திறந்தது பெரும் சர்ச்சையானது என்பது நினைவிருக்கலாம்.