பழனியில் கோலாகலமாக நடந்த குடமுழுக்கு விழா

Aadmika
Jan 27, 2023,09:21 AM IST
திண்டுக்கல் : பழனி மலைக் கோவிலில் ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களும் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 27 ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஜனவரி 16 ம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 23 ம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. ஜனவரி 26 ம் தேதியன்று பிற்பகலுடன் மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 
இந்நிலையில் ஜனவரி 26 ம் தேதியன்று காலை, படிப்பாதை, உப சன்னதிகள் என பழனி மலையில் உள்ள 12 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பாத விநாயகர் கோவில், இடும்பன், கதம்பன், கிரிவல பாதையில் உள்ள 5 மயில்கள், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலகர், சண்டிகாதேவி, விநாயகர், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஜனவரி 26 ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைவரும் அனுமதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காவடி தூக்கி வந்தும், கிரிவலம் வந்தும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் கூடி உள்ளனர்.

ஜனவரி 27 ம் தேதியான இன்று காலை பழனி மலைக்கோவிலில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட பிற சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மலைக் கோவிலுக்கு சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மற்ற பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வுகளை காண்பதற்காக 18 இடங்களில் எல்இடி திரைகள் அமைத்து, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.