பாகிஸ்தானில் பரபரப்பு.. இம்ரான் கான் அதிரடி கைது!

Aadmika
May 09, 2023,04:51 PM IST
இஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கோர்ட் வளாகத்திற்குள் வைத்து துணை ராணுவப் படையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் அல் காதிர் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளை பஹ்ரியா நகரில் உள்ள ரூ.530 மில்லியன் மதிப்பிலான நிலத்தை முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அறக்கட்டளை இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியால் நடத்தப்பட்டு வந்துள்ளது. 



இந்த நில மோசடி உள்ளிட்ட கிட்டதட்ட 100 க்கும் அதிகமான வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட பதிலளிக்கவோ, விசாரணைக்கு ஆஜராகவோ இல்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று கோர்ட்டில் ஆஜராவதற்காக லாகூர் இருந்து இஸ்லாமாபாத் வந்த இம்ரான் கானை துணை ராணுவப் படையினர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து கோர்ட் வளாகத்திற்குள் புகுந்து கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சமீபத்தில் ராணுவம் குறித்து கடுமையாக விமர்சித்து இம்ரான் கான் பேசியதாகவும், இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரான் கானின் கைது, மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது கோர்ட் வாசலில் பாதுகாப்பு படையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் கடும் மோதல் நடைபெறற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பும் லாகூர் அவரது வீட்டில் வைத்து இம்ரான் கானை கைது செய்ய முயற்சித்த போதும் மோதல் வெடித்தது.