பப்புவா நியூகினியா மொழியில் திருக்குறள்.. பிரதமர் மோடி வெளியிட்டார்

Su.tha Arivalagan
May 22, 2023,12:05 PM IST
போர்ட் மார்ஸ்பி: பப்புவா நியூகினியா நாட்டின் தோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

போர்ட் மார்ஸ்பி நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது பப்புவா நியூகினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவும் உடன் இருந்தார்.  மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக உள்ள சசீந்திரன் முத்துவேல் மற்றும் சுபா சசீந்திரன் இணைந்து இந்த  திருக்குறள் நூலை டாக் பிசின் மொழியில் எழுதியுள்ளனர்.



முன்னதாக  நேற்று பப்புவா நியூகினியாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதன் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த நாட்டுக்கு வரும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். அவருக்கு சிற்பபான வரவேற்பு அளித்ததோடு, காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கினார் மராப்பே.

அதன் பின்னர் 14 பசிபிக் தீவு நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தத் தீவு நாடுகளின் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக டாக் பிசின் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவட்டில், இரு நாடுகளின் உறவுகளை இது வலுப்படுத்தும். தமிழ் செம்மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் நூல் பப்புவா நியூகினியா மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது சிறப்பானது. திருக்குறள் மிகச் சிறந்த காவியம்.  வாழ்க்கையின் அத்தனை அம்சங்களுக்கும் தேவையான அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் இதில் உள்ளன என்றார் பிரதமர் மோடி.

இந்த நூலை எழுதிய சசீந்திரன் மற்றும் சுபா சசீந்திரனையும் பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.