பிரதமர் மோடி வெளியிட்ட ரூ. 75 நாணயம்.. எங்கு கிடைக்கும்.. எப்படி வாங்கலாம்..?

Su.tha Arivalagan
May 28, 2023,03:04 PM IST
சென்னை:  புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சிறப்பு ரு. 75 நாணயத்தை எங்கு பெறுவது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் இன்று டெல்லியில் திறந்து வைக்கப்பட்டது. காலையில் பூஜையுடன் தொடங்கிய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய நாடாளுமன்றத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இன்று காலை முதல் பிற்பகல் அவரது உரையுடன் இந்த விழா முடிவடைந்தது. மொத்த நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடிதான் நடு நாயகமாக காணப்பட்டார். விழா நாயகராகவும் அவரே வலம் வந்தார்.




இந்த விழாவின் முக்கிய அம்சமாக ரூ. 75 நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நாணயத்தை எங்கு வாங்கலாம் என்பது குறித்துப் பார்ப்போம். பொதுவாக இதுபோன்று சிறப்பு நாணயமாக வெளியிடும்போது அது குறிப்பிட்ட அளவில் மட்டுமே அச்சடிக்கப்படும். அதிக அளவில் இது புழக்கத்தில் விடப்பட மாட்டாது.

இந்தியாவில் மொத்தம் நான்கு இடங்களில்தான் நாணயங்கள் அச்சடிக்கப்படுகின்றன. மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள அரசு நாணய அச்சகங்களில்தான் நாணயங்கள் அச்சடிக்கப்படும். இந்த இடங்களில்தான் நாம் சிறப்பு நாணயங்களையும் வாங்க முடியும்.

இந்த நாணய அச்சகங்களுக்கு என்று தனியாக இணையதளங்கள் உள்ளன. அதில் போய் நாம் முன்பதிவு செய்து நாணயங்களைப் பெறலாம்.  இந்த அச்சகங்களின் இணையதளங்களில் நினைவு நாணயங்களை எப்படிப் பெறலாம் என்ற வழிகாட்டலும் இடம் பெற்றிருக்கும். அதைப் பின்பற்றி நாம் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.