ஒடிசா ரயில் விபத்து.. காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுக்க குவியும் "மனிதம்"!

Aadmika
Jun 03, 2023,11:56 AM IST

புவனேஸ்வர் : ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கிறார்கள். 

ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு பெங்களூரு- ஹவுரா ரயில், ஷால்மர் - சென்னை இடையேயான ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. இரண்டு பயணிகளின் ரயில்களிலும் ஏராளமான பெட்டிகள் தடம் புரண்டன. இதில் தற்போது வரை 233 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 900 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.



விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. ஏராளமானோரின் உடல்கள் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் சிதைந்துள்ளன. அடையாளம் தெரியாத உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் இப்பகுதியில் நடந்து வருகிறது. இடுபாடுகளுக்குள் பலரும் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 200 ஆம்புலன்ஸ்கள் இரவு முதல் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இது போக 45 மொபைல் மருத்துவ குழுவும் சிகிச்சை அளித்து வருகிறது. 50 கூடுதல் டாக்டர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுப்பதற்காக மருத்துவமனைகளிலும், ரத்த வங்கிகளிலும் ஏராளமான நல்ல உள்ளம் கொண்டவர்கள் வரிசையில் குவிந்து வருகின்றனர். இவர்கள் வரிசையில் நின்று ரத்த தானம் அளித்து வருகிறார்கள்.