கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்குப் போகும் வட மாநிலத்தவர்கள்.. "ஹேப்பி"யான காரணம்!

Aadmika
Mar 04, 2023,12:59 PM IST
சென்னை :  வட இந்தியத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். ஆனால் ஹோலி பண்டிகையைக் கொண்டாடவே தாங்கள் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.



மத்திய அரசு பணியான ரயில்வே ஊழியர்கள் துவங்கி, சாலை அமைக்கும் பணி, கட்டிட பணி என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வட மாநிலத்தவர்களை பார்க்க முடிகிறது. பெரிய ஓட்டல் முதல் சாலையோர பானி பூரி, கையேந்தி பவன் வரை வடமாநிலத்தவர்கள் தான் முதலாளிகளாகவும், தொழிலாளிகளாகவும் இருந்து வருகிறார்கள்.


"வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்".. திமுகவினர் மீது பாயும் அண்ணாமலை


இவர்களில் சிலர் பிழைப்பிற்காக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் கான்ட்ராக்ட் அடிப்படையில் ஏஜன்ட்கள் மூலம் வேலைக்கு வந்து, இங்கேயே செட்டில் ஆனவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தொழில் நகரான திருப்பூரில் வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் இந்த விவகாரத்தை பீகார் சட்டசபையில் எழுப்பி, பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் வட மாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பற்றி போலீசாரிடம் கேட்ட போது, அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். அடித்துக் கொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்படுவது தவறான தகவல். இதை யாரும் நம்ப வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இப்படி வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருந்து வட மாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக செந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. டிக்கெட் கிடைக்காமல் பலரும் அலைமோதி வருகின்றனர். இதை வைத்து, தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அனைவரும் சொந்த ஊர்களுக்கே திரும்பி சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற புதிய வதந்தியையும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பரப்புகிறார்கள்.

இது பற்றி ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரலில் காத்திருந்த வடமாநில இளைஞர்கள் சிலரிடம் கேட்டதற்கு, நாங்கள் ஊரை காலி செய்து கொண்டு போகிறோம் என யார் சொன்னது? எங்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. அந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக தான் நாங்கள் இப்போது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறோம். ஹோலி கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு மீண்டும் பிழைப்பை பார்க்க வேண்டுமே.  மீண்டும் இங்கு தான் திரும்பி வருவோம் என்கின்றனர்.

வதந்தி பரப்புபவர்களே.. அது தேச விரோத செயல் என்பதை உணர்ந்து திருந்துங்கள்.. இந்தியாவின் ஒற்றுமையை உறுதி செய்யுங்கள்.