பைபிள் வைத்திருந்த 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை.. அதிர வைக்கும் வட கொரியா!

Su.tha Arivalagan
May 27, 2023,02:21 PM IST
டெல்லி: வட கொரியாவில் பைபிள் படித்தாலோ அல்லது வைத்திருந்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

பைபிளுடன் யாராவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் வயது வித்தியாசமே இல்லாமல் கைது செய்யப்படுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகளைக் கூட வட கொரிய அதிகாரிகள் விடுவதில்லையாம்.



இதுதொடர்பாக வெளியுறவுத்துறையின் மத சுதந்திர பிரிவின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கலள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிற மதத்தவர்களும் அவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் ஒரு 2 வயதுக் குழந்தையும் சிறையில் உள்ளதுதான் கொடுமை. அந்தக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். காரணம், அக்குழந்தையிடம் பைபிள் இருந்ததால்.

இந்தக் குழந்தையின் குடும்பமே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.   சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் படும் பாடு மிக மோசமாக உள்ளது. அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.  மனித உரிமைகள் முற்றிலும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ மதத்தைக் கண்டாலே வட கொரிய ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர்களிடம் சிக்கி சித்திரவதையை சந்திப்பதற்குப் பதில் பல கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டே ஓடி வருகின்றனர்.  பல கிறிஸ்தவப் பெண்கள் பாலியல் பலாத்கார மிரட்டலுக்குள்ளாகிறார்கள். அந்தக் கொடுமைக்கும் ஆளாகிறார்கள். கொலை, உறுப்புகள் திருட்டு என பல்வேறு சட்டவிரோத காரியங்களுக்கும் அவர்கள் பலிகடா ஆகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.